Video of the Day

பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்




* சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்
* பெரம்பூரில் விபத்து திருவள்ளூரில் உடல் மீட்பு

சென்னை: பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விளையாட்டு வீரரின் உடல் ரயில் மோதி மேலே தூக்கியெறியப்பட்டு, இன்ஜின் முன்னுள்ள கொக்கியில்  சிக்கியது. பெரம்பூரில் இருந்து திருவள்ளூர் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இன்ஜினில் தொங்கியபடி உடல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் ஜவகர் நகர், வெற்றி நகரை சேர்ந்தவர் லோகநாதன். எண்ணூர் துறைமுகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பவித்ரன் (21). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர் தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இறகு பந்து பயிற்சிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்ப பெரம்பூர் லோகோ அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு நோக்கி இரவு 10.40 மணிக்கு புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பவித்ரன் மீது மோதியது. படுவேகத்தில் வந்த ரயில் மோதியதால் மேலே பவித்ரன் தூக்கியெறியப்பட்டார்.
அதே வேகத்தில் கீழே வந்த அவரது உடல், ரயில் இன்ஜின் கொக்கியில் சிக்கிக்கொண்டது. இரவு நேரம் என்பதால் உடல் ரயில் இன்ஜினில் சிக்கி இருப்பது தெரியாமல், ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது இன்ஜினில் தொங்கிய பவித்ரனின் கால்கள் ரயில்வே தண்டவாளத்தில் தேய்ந்தப்படியே சென்றது. இதனால் ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் தெரித்தது. சில கற்கள் ரயிலின் ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த பயணிகள் மீதும், ரயில் நிலையத்தில் நின்று இருந்த பயணிகள் மீதும் சரமாரியாக பாய்ந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள் பெரம்பூர் லோகோ, ஆவடி, அம்பத்தூர் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களை கடந்து, இன்ஜினில் தொங்கிய உடலுடன் ரயில் சென்று கொண்டிருந்த காட்சி பார்த்தவர்களின் இதயத்தை திடுக்கிட வைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி இன்ஜின் கொக்கியில் சிக்கிய பவித்திரனின் உடலை மீட்கும்படி டிரைவருக்கு உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி 30 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து திருவள்ளூருக்கு நள்ளிரவு 11.20 மணிக்கு வந்த ரயிலை நிறுத்தினர். அதன்பிறகு இன்ஜினில் தொங்கியபடி கிடந்த பவித்ரனின் உடலை அரை மணி நேரம் போராடி ரயில்வே போலீசார் மீட்டனர். அவரது இரு கால்களும் சிதைந்திருந்தன. இதனால் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்றது. அதன்பிறகு பவித்ரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையறிந்து நேற்று காலை திருவள்ளூர் வந்த அவரது பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு பவித்ரனின்  சடலத்தை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பெரம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி தொங்கியபடி 30 கிலோ மீட்டர் தூரம் விளையாட்டு வீரரின் உடல் இழுத்து சென்ற சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
Share on Google Plus

About Namma Veedu real estate

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment