Video of the Day

பெங்களூருவில் தாயின் கண் எதிரே அரங்கேறிய தலைகுனிவு சம்பவம் நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தை

பெங்களூரு

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தந்தையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மகள்

பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெங்களூருவில் இந்த தலை குனிவு சம்பவம் அரங்கேறி இருப்பதாக நிவேதிதா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த படங்களை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நிவேதிதா சக்ரவர்த்தி கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர்

‘‘நானும் எனது தோழி அர்ச்சனாவும் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவளது தந்தையும் மதுரையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் தாய்(பள்ளி ஆசிரியை) வேடிக்கை பார்த்துக்கொண்டு கணவருக்கு ஆதரவாக அந்த பெண்ணை அவர் பங்கிற்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த ரோட்டில் சென்றவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

நான் இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன்.

ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார். இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளார். அந்த பெண் என்ன சொல்ல வருகிறார் என்றுகூட அவர் கேட்கவில்லை. மாறாக வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மதுரைக்கு இழுத்து சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்.’’

இவ்வாறு கம்ப்யூட்டர் என்ஜினீயரான நிவேதிதா சக்ரவர்த்தி கூறினார்.

தலைகுனிவு சம்பவம்

போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது சம்பந்தப்பட்ட 3 பேரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

பெங்களூருவில் நடுரோட்டில் அதுவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மகளை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Share on Google Plus

About Namma Veedu real estate

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment