Video of the Day

வர்ணம் பூசப்படும் சாதி கொலைகள்

undefined
‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி’’ என்பதுதான் தமிழ்நாட்டில் காலம்காலமாக கூறப்படும் நெறிமொழி. அவ்வையார் பாடிய பாடல் இது என்றாலும், இதைத்தான் தந்தை பெரியார் உள்பட அனைத்து சமுதாய சீர்திருத்த தலைவர்களும் கற்றுக்கொடுத்தார்கள். ஆதிகாலத்தில் அவரவர் செய்துவந்த தொழிலை வைத்துத்தான், சாதிகளின் பெயர் சூட்டப்பட்டு சாதிகள் உருவாகின. ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. இந்த தொழிலை இன்னார்தான் செய்வார்கள் என்ற நிலையெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லா தொழில்களையும் எல்லோரும் செய்யும்போது, இன்னும் இந்த சாதிகளை வைத்து பிரிவினைகள் ஏன்?, மோதல்கள் ஏன்? என்பதைத்தான் ஆன்றோர் ஒருவர் தன் உரைகளில் எப்போதும் கூறிவருகிறார். ஒருபக்கம் சாதி மோதல்கள், மறுபக்கம் மதவேறுபாடுகள் என ஆங்காங்கு திடீர் திடீரென முளைத்து, ஒரு இடத்தில் தொடங்கி காட்டுத் தீ போல பரவுவது வேதனையளிக்கிறது என்றும் அவர் தன் கவலையை தெரிவிக்கிறார். இன்றும் மேலை நாடுகளில் சாதிகளே இல்லை. மதங்கள் மட்டுமே இருக்கிறது.

அமைதியான நதியில் செல்லும் ஓடம்போல சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டின் நல்லிணக்கம் இப்போது தென்மாவட்டங்களில் சுனாமியால் சிக்கி தவிக்கும் கடலில் செல்லும் படகுபோல ஆகிவிட்டது. கடந்த சில மாதங்களாக ஆங்காங்கு சாதி மோதல்கள் நடந்துவருகிறது. தமிழ்நாட்டிலேயே தாமிரபரணி ஒரு ஆறுதான் இந்த பூமியில் உருவாகி இங்கேயே கடலில் கலக்கிறது என்ற பெருமைக்கு சொந்தக்காரர்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சாதி சண்டைகள் நடந்து 20–க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இதுநாள் வரை தாயாய், பிள்ளையாய் ஒட்டி உறவாடிவந்த 3 சாதி மக்கள், இப்போது கடந்த ஒரு ஆண்டாக ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்கு ரத்த வெறியோடு இருக்கிறார்கள் என்றால், ஏதோ திடீரென்று இவர்களுக்கு வந்த சாதி வெறியால் அல்ல. இந்த இருமாவட்டங்களிலும் அதிகமாக நடக்கும் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, வட்டி வசூல், ரியல் எஸ்டேட், காதல், அதைத் தொடர்ந்து ஆணையோ, பெண்ணையோ கடத்தி செல்லுதல் போன்றவைகள் தான் திடீரென உருவாகும் சாதி மோதல்கள், கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களும், அதைச் செய்தவர்களும் தனிப்பட்டவர்கள் என்றாலும், தங்களுக்கு வலுசேர்க்க உடனடியாக அந்த சம்பவத்துக்கு சாதி வர்ணம் பூசிவீடுவது தான் சாதி மோதலாக தலையெடுத்து விடுகிறது. தனிப்பகை சாதி பகையாக ஆக்கப்பட்டு விடுகிறது.

சாதி பெயரை சூட்டிவிட்டால் பிரச்சினை வேறுபக்கம் போய்விடுகிறது என்ற திட்டத்தில் திசையை மாற்றி விடுகிறார்கள். தனிப்பட்ட பகையால் நடந்த குற்றத்துக்கு சாதி காரணம் கூறப்பட்டுவிடுகிறது. இதனால் நேற்று வரையில் உயிர் நண்பர்களாக இருந்தவர்கள்கூட ஜென்ம விரோதிகள்போல மாறிவிடுகிறார்கள் அல்லது மாற்றப் பட்டுவிடுகிறார்கள். ஊரும் இரண்டுபட்டுவிடுகிறது. எனவே, சாதி மோதல்களை தடுக்கும் வகையில் போலீசார் இதுபோன்ற குற்றங்களை சட்டத்தை மீறிய ஒரு குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும். சாதி பிரச்சினை என்று கனிவு காட்டிவிடக்கூடாது. ஒரு குற்றமோ, கொலையோ நடந்தால், அதன் பிரதிபலிப்பாக மற்றொரு குற்றம் நடந்துவிடக்கூடாது என்ற கண்காணிப்பில் விழிப்போடு இருக்கவேண்டும். சாதி மோதல்களாக மாறுவதற்கு அடிப்படை காரணங்களாக உருவெடுக்கும் குற்றங்களை அடியோடு களைய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
Share on Google Plus

About Namma Veedu real estate

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment